Friday, April 12, 2013

உதயன் மீது தாக்குதல்,துப்பாக்கிச்சூடு: எரித்து நாசம்



யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த மூவர் அடங்கிய துப்பாக்கித்தாரிகளே அங்கு கடமையிலிருந்த காவலாளியை
அச்சுறுத்தி துரத்திவிட்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், உதயன் இணையத்தள அறைக்குள்ளும் புகுந்து அங்கிருந்த இலத்திரனியல் பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இயந்திரங்களுக்கான பிரதான மின்விநியோகத்தை துண்டித்தே துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் இயந்திரங்கள் மற்றும் கணினி அறை மற்றும் இயந்திரங்களுக்கும் விநியோகத்திற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பத்திரிகைகளுக்கும் கழிவு எண்ணெய் இன்றேல் பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகத்திற்கு வெளியேயும் அலுவலகத்திற்குள்ளும் ஆங்காங்கே துப்பாக்கி சன்னங்கள் கிடப்பதாக தெரிவித்த எமது செய்தியாளர் அறைகளில் இருந்து புகைகிளம்பிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சம்பவத்தை அடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதாகவும் சேதமாக்கப்பட்ட பகுதிகளுக்கு செய்தியாளர்களை செல்வதற்கு அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment